சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் திரைப்பட நடிகை அஞ்சு அரவிந்த் வியாழக்கிழமை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமான் முன்பு நாட்டியமாடி தனது நாட்டியத்தை சமர்பணம் செய்தார்.
கேரளாவைச் சேர்ந்த நடிகை அஞ்சு அரவிந்த் தமிழில் பூவே உனக்காக, அருணாசலம், வாஞ்சிநாதன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை அஞ்சு கேரளா மாநில எர்ணாகுளத்தில் உள்ள தனியார் பரதநாட்டியக் கல்லூரியில் முதுகலை நாட்டியம் பயின்று வருகிறார்.
இந்நிலையில் அப்பள்ளியைச் சேர்ந்த 42 பேருடன் நடிகை அஞ்சு அரவிந்த் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு வியாழக்கிழமை வருகை தந்தார். பின்னர் சித்சபை முன்பு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு முன்பு நாட்டியமாடி, தனது நாட்டியத்தை ஆடல்வல்லானுக்கு சமர்பணம் செய்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா குறித்து கேள்விபட்டிருக்கிறேன். நாட்டியாஞ்சலியில் ஒருமுறையாவது ஆட வேண்டும் என்பது எனது ஆசை என நடிகை அஞ்சு அரவிந்த் தெரிவித்தார்