அனுஷ்கா, தமன்னா இணைந்து நடிக்கும் பாகுபலி படம் மத உணர்வை புண்படுத்துவதாக எதி;ப்பு கிளம்பியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. பிரபாஸ், ராணா, சத்யராஜ் போன்றோர் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். ராஜாமவுலி இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘நான் ஈ’ என்ற ஹிட் படத்தை எடுத்து பிரபலமானவர்.
சரித்திர படமாக இது தயாராகிறது. இந்த படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியாகின. இதனை பார்த்த ஜெயின் சமூகத்தினர் அதிர்ச்சியானார்கள். தங்கள் மதத்தை புண்படுத்துவது போல் இப்படம் எடுக்கப்படுகிறது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
பாகுபலி என்பது ஜைன துறவியை குறிக்கும் பெயர் ஆகும். ஆனால் படத்தின் வீடியோவில் பாகுபலியாக வரும் பிரபாஸ் கையில் வாளுடன் சண்டையிடுபவராக போர்க்கள காட்சிகளில் வருகிறார்.
இது தங்கள் மதத்தை அவமதிப்பது போல் உள்ளது என்று ஜெயின் சமூகத்தினர் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். ராஜ மவுலிக்கு அவர்கள் வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளனர். படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் தங்களிடம் அனுமதி பெற்ற பிறகே படத்தின் ஸ்டில்களை வெளியிட வேண்டும் என்றும் நோட்டீசில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.