இயக்குநர் பாலுமகேந்திராவின் உடல் வெள்ளிக்கிழமை (பிப்.14) தகனம் செய்யப்பட்டது.
இயக்குநர் பாலுமகேந்திரா (74), திடீர் மூச்சுத்திணறல் காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது சினிமா பட்டறையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அவரது உடல் போரூரில் உள்ள மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இயக்குநர்கள் பாரதிராஜா, மகேந்திரன், பாலா, அமீர், சசிகுமார், வெற்றிமாறன், ராம், நடிகை அர்ச்சனா உள்ளிட்டோர் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
பகல் 1 மணி அளவில் போரூர் மின் மயானத்தில் இயக்குநர் பாலுமகேந்திராவின் உடல் எரியூட்டப்பட்டது. இறுதிச் சடங்குகளை அவரது மகன் ஷங்கி மகேந்திரன் செய்தார்.
மௌனிகா வந்தார்: முன்னதாக நடிகை பாலுமகேந்திராவின் உடலைப் பார்ப்பதற்கு அனுமதி மறுப்பதாகக் கூறி நாளிதழ்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த நடிகை மௌனிகா வெள்ளிக்கிழமை பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்தார். அப்போது அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார். அதைத் தொடர்ந்து மௌனிகா சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்று விட்டார்.