தென்னிந்திய நடிகர் சங்கம் பல விஷயங்களில் தங்களுக்கு எதிராகவே நடந்து கொள்வதாக நடிகர் நடிகைகளின் மத்தியில் புகைச்சல் கிளம்பியிருக்கிறது.. நடிகர் மாதவன், உட்பட பல நடிகர்களின் சம்பள பிரச்னையில் பஞ்சாயத்து நடந்தபோது நடிகர் சங்கம் நடிகர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உண்டு.
இந்நிலையில் இதோ இன்னொரு குற்றச்சாட்டு! அண்மையில் இயக்குநர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார் நடிகை மனிஷா யாதவ். இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றபோது அந்த சம்பவம் நடந்ததால், சீனு ராமசாமி மீது கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டிருந்தாராம் மனிஷா யாதவ். அதோடு, அங்கிருந்தபடியே நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்.
நடந்த சம்பவங்களை அவரிடம் கேட்ட நடிகர் சங்கத்தின் முக்கிய நிர்வாகி, கொடைக்கானல் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் என்று மனிஷா யாதவை தடுத்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, மனிஷாவை உடனடியாய் சென்னைக்கு வரச் சொல்லி இருக்கிறார். நடிகர் சங்கத்தினால் தனக்கு நியாயம் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையில் சென்னை வந்த மனிஷா வெறுத்துப்போய்விட்டாராம்.
கொடைக்கானலில் நடந்த விஷயத்தை வெளியே சொல்லக் கூடாது, படத்திலிருந்து உன்னை நீக்கியதற்கு நஷ்டஈடாக இரண்டு லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்குக் கிளம்பு என்று உத்தரவிட்டாராம் அந்த நிர்வாகி. படத்தில் பார்ப்பது போலவே பயமுறுத்தும்படி அவரது பேச்சு இருந்ததால், உண்மையிலேயே பயந்துபோய் பெங்களூருவுக்குக் கிளம்பிப்போய்விட்டாராம் மனிஷா யாதவ்.