நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் விஜய்யும் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுக்க அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று மோடி இரண்டாம் கட்ட பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் இரண்டுநாள் சுற்றுபயணம் மேற்கொண்டு கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி,சேலம் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரச்சாரப் பொது கூட்டங்களில், வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
கடந்த 13ம் தேதி, நரேந்திர மோடி சென்னை வந்தபோது, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். இந்நிலையில் ரஜினிகாந்தை தொடர்ந்து நடிகர் விஜய்யும் இன்று நரேந்திர மோடியை சந்திக்கிறார். தற்போது தேர்தல் பிரசாரத்துக்காக நரேந்திர மோடி கோவை வருகிறார். அங்கு வைத்து நரேந்திர மோடியை, நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். மாலை 7 மணியளவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது.
விஜய் இதனை தனது அதிகாரப்பூர்வ ட்டுவிட்டர் தளத்தில் உறுதி செய்து இருக்கிறார். மேலும் அதில் அரசியல் சார்பு அல்லாத சந்திப்பு என்றும் தெரிவித்துள்ளார். மோடி, ரஜினியை சந்தித்த போதே இந்த சந்திப்பு நடைபெறுவதாக இருந்ததாம். ஆனால் அன்று விஜய் ஐதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் சந்திக்க முடியவில்லையாம். இந்நிலையில்தான் இன்று அந்த சந்திப்பு நடக்கவிருக்கிறது. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, ரஜினியைத் தொடர்ந்து விஜய்யும் சந்திக்க இருப்பதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.