இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,
மியூசிக்கல் சினிமா ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரைக்கும் நிறைய வந்துள்ளதாக சொல்கிறார்கள். கேட்க இனிமையான பாடல்கள், பார்க்க அழகான இடங்களை காட்டினால் மட்டும் அது மியூசிக்கல் சினிமா ஆகாது. அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளே தன் சொந்தக் குரலில் பாடி நடித்தால்தான் அது மியூசிக்கல் சினிமா.
அப்படியொரு படம்தான் ‘வானவில் வாழ்க்கை’. இப்படத்தில் மொத்தம் 19 பாடல்கள் உள்ளன. கர்நாடக், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், ராக், பாப் என இசையில் எத்தனை வகை இருக்கிறதோ அத்தனையும் இதில் இருக்கும்.
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியக் கனவாக இருந்தது. இப்போதுதான் அதற்கான நல்ல சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு வருடமாக உழைத்து கதையை உருவாக்கியுள்ளேன். ஆறு மாதத்துக்கு முன்னரே திரைக்கதை செதுக்கி, வசனம் எழுதி, இப்போது தஞ்சை அருகே உள்ள கல்லூரியில் படத்தை தொடங்கிவிட்டேன்.
இப்படத்தின் கதை கல்லூரி கலை விழாவை மையமாக கொண்டது. இதில் நடிகர், நடிகைகள் என யாரும் கிடையாது. அனைவரும் படித்து, முடித்த, கல்லூரி மாணவ, மாணவிகளே. இது ஒரு பொழுதுபோக்கான படமாகவும், படம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அவர்களின் கல்லூரி காலங்கள் மீண்டும் நினைவில் மலரும்.