பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது.
கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம் தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி.
அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன் இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.
என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை.
இந்த நிகழ்ச்சிக்காகத் தான் முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.
மேலும், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன்.
துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.
தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.