உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும்.
நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான இரசாயன பூச்சுகள் பலன் தராது.
சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும். இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.
முகம் பொலிவு பெற:
வெயிலிலும், மாசு நிறைந்த இடங்களிலும் அலைந்து திரிபவர்களின் முகம் எண்ணெய் பசையுடன் இருக்கும். இதனைப் போக்கி முகம் பொலிவு பெற கீழ்கண்ட முறையை பின்பற்றலாம்.
கஸ்தூரி மஞ்சள் – 5 கிராம், சந்தனத் தூள் – 5 கிராம், வசம்பு பொடி – 2 கிராம்
எடுத்து பாதாம் எண்ணெயில் குழைத்து முகத்தில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகத்தை கழுவி மெல்லிய பருத்தித் துணி கொண்டு முகத்தை துடைத்து வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும். வாரம் இருமுறையாவது இவ்வாறு செய்து வரவேண்டும்.