ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், நிரபராதி என்பதை நிரூபிக்கும் ஆவணப்பட வெளியீடு தியாகராயநகர் சர்.பி.டி.தியாகராயஜர் அரங்கில் இன்று மாலை இடம்பெறவுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரை தலைவராக கொண்டு இயங்கும் மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் பேரறிவாளன் நிரபராதி என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் “உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம்” என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆவணப் படம் 55 நிமிடங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் முருகையன் கருத்து வெளியிடுகையில், மரண தண்டனை விவாதத்துக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கும் இந்த கால கட்டத்தில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு முன் உதாரணமாக எடுத்து அது தொடர்பாக உண்மை நிலையை அறிய ஆதாரங்களுடன் ஆவணப்படம் எடுத்துள்ளோம். பேரறிவாளனை கைது செய்த பொலிஸ் அதிகாரி அப்போது என்ன சொன்னார்? இப்போது என்ன சொல்கிறார், எதனால் பேரறிவாளன் சிக்கினார்? போன்ற பல்வேறு கோணங்கள் பற்றி பொலிஸ் அதிகாரி விளக்குகிறார்.
அப்போது வெளிவராத பல உண்மைகள் இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. பேரறிவாளன் நிரபராதி என்பதற்கான அழுத்தமான உண்மைகள் இதில் இடம் பெறுகிறது. குறித்த ஆவணப்படத்தை இயக்குனர் பாரதிராஜா வெளியிட அதை வெற்றி மாறன், ஒளிவண்ணன் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் சீமான், நல்லக்கண்ணு, தனியரசு உள்பட பலரும் பங்கு பெறவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.