பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் முகமாகவும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் இன்று வியாழக்கிழமை மன்னாரில் விழிர்ப்புணர்வு நிகழ்வும், எதிர்ப்பு பேரணியும் மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பதிவுகளாக மீட்கப்பட்ட பெண்களின் ‘ஆடைகள்’ காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கக்கோரி பெண்கள் உரிமைக்கான செயற்பாட்டுக் குழுவினர் தயாரித்த மகஜர் வாசிக்கப்பட்டு அங்கு வருகை தந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நந்தினி ஸ்ரான்லி டி மேல் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
மகஜர் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி வீதி நாடகமும் இடம் பெற்றது.
இறுதியாக மன்னார் அரச பேருந்து நிலையத்தில் இருந்து விழிர்ப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் வைத்தியசாலை சந்தியை சென்றடைந்தது.
குறித்த நிகழ்வில் சட்டத்தரணி எஸ்.வினோதன், மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செமாலை அடிகளார், மன்னார் மாவட்ட மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன், மட்டக்களப்பு கலாசாரக் குழு, சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.