இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பான முனைப்புகளை அமெரிக்கா மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் இலங்கைக்கு எதிரான இந்த பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகள் இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இதனை விட இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நடத்தாது தன்னிச்சையாக செயற்பட்டு வருவது குறித்தே சர்வதேச சமூகம் தற்பொழுது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.
இலங்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஜெனிவா மனித உரிமை மாநாட்டுக்கு முன்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் போர் குற்றச்சாட்டு தொடர்பில் பொறுப்புக் கூறும் தன்மையுடன் பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை உள்நாட்டில் ஆரம்பிக்க வேண்டும் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.