எந்தவொரு இனமும் ஒரு இனத்தை அடக்கியாள முடியாது. அதற்கு எந்தச் சந்தர்பத்திலும் இடமளிக்கவும் முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கூற்றுக்களுக்கு பதிலளிக்க தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் வைத்தியசாலையை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாம் விக்கினேஸ்வரன் மீது நீதிபதியாக இருந்த வேளையில் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தோம். ஆனால் இன்று அவர் எங்களைப் போன்று மேடைகளில் அரசியல் பேசுகின்றார். இதனையிட்டு மகிழ்வதா துன்பப்படுவதா என்று எமக்குத் தெரியவில்லை.
இந்த வைத்தியசாலையை ஒருவர் தனது சகோதரி இறந்ததன் ஞாபகார்த்தமாகவும் மற்றையவர் தனது மனைவியின் ஞாபகார்த்தமாகவும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக நவீன முறையில் பிரமாண்டமாக அமைந்துள்ளனர்.
இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைவதுடன் இதில் நானும் கலந்து கொள்வதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இந்தத் துணிகரமான முயற்சியில் ஈடுபட்ட இந்த இரண்டு இளைஞர்களுக்கும் நான் இந்த நாட்டு மக்களின் கௌரவத்தை சமர்ப்பிக்கின்றேன்.
வட மாகாணத்தின் முதலமைச்சரின் கூற்றுக்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. ஆனால் கடந்த காலத்தில் நீங்கள் இந்தப் பகுதிக்கு வந்திருந்தீர்களோ தெரியாது. ஆனால் கடந்த காலத்தில் இந்தப் பகுதிகளில் பல இராணுவ முகாம்கள் காணப்பட்டன.
அத்தகைய முகாம்கள் பலவும் அகற்றப்பட்டு ஏழு முதல் பத்து வரையிலான முகாம்களுக்குள் இராணுவத்தினர் தற்போது முடக்கப்பட்டுள்ளார்கள். முன்னர் வட பகுதியில் சுமார் எழுபத்தையாயிரம் வரையிலான இராணுவத்தினர் நிலை கொண்டு இருந்தார்கள்.
இன்று இங்கு இத்தகைய நிலமை இல்லை. தற்போது சுமார் பன்னிரெண்டாயிரம் படையினர் வரையில் இப்பகுதியில் நிலை கொண்டுள்ளார்கள். நான் இன்று வரும்போது குடாநாட்டில் வெளிவருகின்ற ஒரு பத்திரிகையின் ஆசிரிய தலையங்கத்தைப் பார்த்தேன். அதில் இராணுவத்தினரின் பிரசன்னம் தமிழ் மக்களின் வாழ்வில் பிரச்சினையென்று எழுதப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் இந்த உலகத்தில் ஒரே மாதிரியாகத்தான் பிறந்தோம். எமக்குள் ஓடும் இரத்தமும் சிவப்புத்தான். இதில் கறுப்பு, பச்சை, நீலம் என்ற வேறுபாடுகள் எவையும் கிடையாது. எந்தவொரு இனமும் ஒரு இனத்தை அடக்கியாள முடியாது. அதற்கு எந்தச் சந்தர்பத்திலும் இடமளிக்கவும் முடியாது என்றார்.