சிரியாவில் மக்கள் எழுச்சி ஆரம்பமானது முதற்கொண்டு தடுத்து வைக்கப்பட்ட சுமார் 11,000 பேர் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கான தெளிவான சான்று உள்ளதாக முன்னாள் போர்க் குற்ற விசாரணையாளர்கள் மூவர் அறிக்கையிட்டுள்ளனர்.
பிரித்தானிய கார்டியன் பத்திரிகையும் அமெரிக்க சி.என்.என். ஊடகமும் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவரால் கடத்தி வரப்பட்ட இறந்த கைதிகளது ஆயிரக்கணக்கான புகைப்படங்களை பரிசோதித்ததைத் தொடர்ந்தே விசாரணையாளர்கள் மேற்படி அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைகளில் சிரிய அரசாங்கம் தொடர்புபட்டிருந்ததற்கான சான்று உள்ளதாக விசாரணையாளர்களில் ஒருவர் தெரிவித்தார்.
சிரியா தொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தை இன்று புதன்கிழமை சுவிட்ஸர்லாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு ஒருநாள் முன்பாக மேற்படி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சிரியாவிலிருந்து வெளியேறிய சீஸர் என அழைக்கப்படும் இராணுவப் புகைப்படக் கலைஞரால் சிரியாவில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சுமார் 11,000 கைதிகள் தொடர்பான 55,000க்கும் அதிகமான இலத்திரனியல் புகைப்படங்கள் கடத்தி வரப்பட்டுள்ளன.
தடுப்புக்காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் மரணத்தை உறுதிப்படுத்தி மரணச் சான்றிதழ்களை வழங்கும் முகமாக புகைப்படமெடுக்கும் பணியில் சீஸர் ஈடுபடுத்தப்பட்டிருந்தவேளை எடுக்கப்பட்ட புகைப்படங்களையே அவர் கடத்தி வந்துள்ளார்.
ஆனால், அந்தக் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதையோ, படுகொலை செய்யப்பட்டதையோ தான் பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
ஒரு நாளுக்கு 50 வரையான பெருமளவு சடலங்களை புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது எனவும் ஒவ்வொரு சடலத்துக்கும் 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்களை செலவிட நேர்ந்தது எனவும் அவர் கூறினார்.