மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் நீர்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் தொழில் நுட்பவியலாளர் ஒருவரின் வங்கி அட்டையை ATM (ஏ.ரி.எம் காட்) திருடி
அவருடைய கணக்கில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை எடுத்த அதே திணக்களத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை பொறுப்பதிகாரி ஜி.ஜே.குணதிலக்க தெரிவித்தார். தனது வங்கி அட்டை திருடப்பட்ட நிலையில் தனது கணக்கில் இருந்து 2 தடவைகள் ரூ.35 ஆயிரம் களவாடப்பட்டுள்ளதாக அடம்பன் நீர்பாசன திணைக்களத்தில் கடமையாற்றும் தொழில் நுட்பவியலாளர் ஒருவர் கடந்த 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) விடத்தல் தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் விடத்தல் தீவு காவல்துறையினர் குறித்த பிரச்சினை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வந்ததோடு நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய இவ்விடையம் தொடர்பாக குறித்த வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர். குறித்த தொழில் நுட்பவியலாளரின் பணம் எடுக்கப்பட்ட தினத்தில் முருங்கன் கிளையில் உள்ள தன்னியக்க இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதியப்பட்ட புகைப்படங்களை நீதிமன்றத்தினுடாக விடத்தல் தீவு காவல்துறையினர் குறித்த வங்கியிடம் கேட்டிருந்தனர்.
இந்த நிலையில் வங்கி வழங்கிய புகைப்படங்களுக்கு அமைவாக குறித்த திணைக்களத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றும் ஒருவரின் புகைப்படமும் அதில் பதிவாகியிருந்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (4 ஆம் திகதி) குறித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரை விடத்தல் தீவு காவல்துறையினரால் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது தான் குறித்த பணத்தை எடுத்ததாக ஒப்பு கொண்டுள்ளார்.
திருடப்பட்ட ATM வங்கி அட்டை உடைக்கப்பட்டு மலசலகூடக்குழியினுள் போட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளை விடத்தில் தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0