ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் திடீரென இராஜிநாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், எம்.பி. பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
பதவி விலகல் கடிதம் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவிடமும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“மக்கள் கோரும் நாடாளுமன்றம் அமைய தேர்தல் நடத்தப்பட வேண்டும். கட்சியுடன் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஒரு தந்தை போலவே கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ என்னை வழி நடத்தினார்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஐக்கிய மக்கள் சக்திதான் எனது கட்சி. சஜித்தான் நாட்டைச் சிறப்பாக நிர்வகிக்கக் கூடியவர். மக்கள் விரும்பினால் மீண்டும் அரசியலுக்கு வருவேன்” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சமிந்த விஜேசிறி எம்.பியின் இராஜிநாமாக் கடிதத்துக்கமைய, 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64 (1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 43 வயதான சமிந்த விஜேசிறி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2020) பதுளை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து கடந்த தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து 3 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தனர்.
வடிவேல் சுரேஷ், அ.அரவிந்தகுமார், சமிந்த விஜேசிறி ஆகியோரே அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பதுளையிலிருந்து தெரிவாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.