2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள் பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக்குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
2008 காலப் பகுதியில் மக்கள் மிக விரைவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மன்னார் பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் கட்டம் கட்டமாக நகர்ந்து முழங்காவில் பகுதியினை அடைந்தனர். ஒரு சில கிழமைகளில் முழங்காவில் பகுதியில் இருந்து வன்னேரி, அக்கராயன்குளம் அடைந்து கிளிநொச்சியை வந்தடைந்தனர்.
அவ்வாறே வவுனியா வடக்கு பகுதியில் இருந்தும் கிளிநொச்சி நோக்கி வந்தனர். மல்லாவி பகுதியில் இருந்தவர்களும் அக்கராயன் ஊடக கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் தற்காலிக குடில்களை அமைத்தனர். பின்னர் கிளிநொச்சி பகுதியில் இருந்தும் தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு என பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் கட்டம் கட்டமாக சென்றடைந்தனர். இவ்வாறே முல்லைத்தீவு, முள்ளியவளை மற்றும் அண்டிய பிரதேசங்களில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதியை வந்தடைந்தனர்.
ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு இடங்களில் தற்காலிகமாக குடியமர்ந்து இறுதியாக 2009 தை, மாசி மாதங்களில் முள்ளிவாய்க்கால் பகுதியை அடைந்தனர்.
இந்த காலப் பகுதியில் வைத்தியசாலைகள் இயங்கி மருத்துவப் பணி செய்வது சவால் மிக்கதாக இருந்தது. எனினும் சிந்திக்க ஆறுதல் எடுக்க நேரமில்லை. ஏதோ வழியில் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாய நிலை. பலரது அயராத சேவை அல்லல் உற்றவர்களுக்கு பேருதவியாக அமைந்தது. இவ்வாறே மக்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க பலர் இரவு பகலாக கடமையாற்ற வேண்டியதாயிற்று.
தொடரும்……..
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து