2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இவ்வாறான போர் அனர்த்தம் பலரையும் சிந்திக்க வைத்தது. மன்னார் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த பொது மக்கள் வெள்ளங்குளம், முழங்காவில், அக்கராயன் பகுதிகளை தாண்டி கிளிநொச்சி நகரை வந்தடைந்தார்கள். ஆனால் கிளி நகரில் இருந்தவர்கள் விமானக்குண்டு விச்சு ஏற்படுத்திய பயமும் பதட்டமும் காரணமாக தர்மபுரம் விஸ்வமடு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர். அச்சந்தர்ப்பத்தில் குண்டு வீச்சு விமானம் வட்டமிடுகின்ற போது ஏற்படுகின்ற பயங்கர சத்தம் ஒவ்வொருவரையும் உலுக்கியது. ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் இச் சத்தம் கேட்ட பின்னர் அன்றைய நாள் முழுவதும் சோர்வடைந்தவர்களாக காணப்பட்டனர். படிப்படியாக இடம்பெயர்கின்ற போது ஒவ்வொரு இடங்களிலும் இருந்து இன்னோர் இடத்திக்கு செல்கின்ற போது அவர்களின் வீட்டு பொருட்களை கைவிட்டு இன்னும் ஓர் இடத்துக்கு சென்று தற்காலிக் குடில்களை அமைத்து வந்தனர். ஆனி மதம் 2008 ம் ஆண்டளவில் வன்னி பிரதேசம் முழுவதும் போர்சத்தம் கவனத்தை ஏற்ப்படுத்தியது.
மக்கள் எல்லா திசைகளிலும் ஓடிக்கொண்டு இருந்த போதிலும் வைத்தியசாலைகள் தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் கடைசி வரை இயங்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. கடுமையான சண்டைகளின் பின்னர் அந்த பகுதிக்கு மிக அருகில் உள்ள வைத்தியசாலைகள் ஒவ்வொன்றாக சேவைகளை நிறுத்திக் கொள்ள புதிய ஓர் இடத்துக்கு சேவைகளை ஆரம்பிக்க ஏற்ற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. முழங்காவில், வன்னேரிக்குளம் கைவிடப்பட்டு அக்கராயன், உருத்திரபுரம் போன்ற வைத்தியசாலைகளின் சேவைகள் அதிகரிக்கப்பட்டன. பின்னர் அக்கராயன், உருத்திரபுரம் போன்ற வைத்தியசாலைகள் இவ்வாறே கைவிடப்பட்டது. வைத்திய ஊழியர்கள் அனைவரும் பிறிதொரு நிலையத்தில் கடமையற்ற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி நகரை விட்டு மக்கள் ஓடிய வண்ணம் இருந்தனர் போதியளவு வசதிகளை கொண்டிருந்த கிளிநொச்சி வைத்தியசாலை தொடர்ந்து அதே இடத்தில் இயங்க வேண்டிய தேவை இருந்தது. ஒரு பகுதி உபகரணங்கள் தர்மபுரம் வைத்தியசாலைக்கும் விஸ்வமடு பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலையிலும் கல்லாறு ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டு அவ்வப்பகுதிக்கு ஊழியர்களும் கடமைக்காக வரவழைக்கப்பட்டனர்.
கிளிநொச்சி பகுதியை விட்டு மக்கள் இடம்பெயர சற்று முன்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தேவைகள் பல மடங்காக் காணப்பட்டது. எனவே அதன் தேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் தாதிகளுக்காக பத்து அறை களை கொண்ட விடுதி பகுதி சர்வதேச மருத்துவ நிதியத்தின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டது. இருபது தாதிகள் தங்கியிருந்தது கடமை புரியகக் கூடிய கட்டிடத் தொகுதி வைபவ ரீதியாக ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. பல தாதிகள் தங்கியிருந்தது கடமை புரியக்கூடிய சூழ்நிலை ஏற்ப்பட்டது.
வைத்தியசாலை சேவைகள் விரிவுபடுத்தப்பட்ட அதே நேரம் தொற்று நோய் தடுப்பு வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது இடம்பெயர்ந்து தற்காலிக குடிசைகளில் இருந்தவர்கள் மலேரியா மற்றும் காச நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருந்தது. ஆகவே இதனை கருத்தில்கொண்டு பல தொற்று நோய் தடுப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. மருத்துவ மாதுக்கள் வீட்டு தரிசிப்புக்களை கிரமமாக செய்து வந்தனர். இதனால் பொது மக்களிடையே தொற்று நோய் பரவும் அபாயம் குறைக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரை விட்டு படிப்படியாக மக்கள் வெளியேற கிளிநொச்சி நகர் வெறிச்சோட தொடங்கியது.
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/