தமிழகத்தில் ஓய்வின்றி உழைத்த மனிதர் ஈழத்தமிழருக்காக இன்றுவரை குரல் கொடுக்கும் உணர்வாளர். ஈழத்தமிழர் மனங்களில் நீங்காஇடம் பிடித்த தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் சென்னையில் தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 59. இவர் பிறந்த இடம் கோவை மாவட்டம் சூலூர் கிராமம்.
பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட மணிவண்ணன் தமிழரின் தேசிய விடுதலை பற்றிய தெளிந்த கருத்துடையவர். சிறந்த திரைப்பட இயக்குனர் மற்றும் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற அடையாளத்துக்கு அப்பால் ஈழத்தமிழர் பற்றிய அரசியல் நோக்கு அவரை அனைத்து தமிழர்களாலும் நேசிக்க வைத்தது. கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் எழுந்த ஈழத்தமிழர் மீதான ஆதரவு அலைக்கும் தமிழ் தேசிய எழுச்சிக்கும் இவரது நடவடிக்கைகள் முக்கிய பங்குவகித்துள்ளன.
தமிழ்த் திரைப்படத்துறையில் சாதனை படைத்த மணிவண்ணன் இறக்கும்போது தனது 50வது படமான சத்தியராஜ் நடித்த அமைதிப்படை 2 ஐ ( நாகராஜா சோழன் MA MLA ) இயக்கியுள்ளார். இவர் அமைதிப்படை 1 ஐ இயக்கியபோது, இலங்கையில் இந்திய அமைதிப்படை செய்த கொடுமைகளுக்கு எதிப்பு தெரிவித்தே அத்தலைப்பு வைத்ததாக ஒரு செவ்வியில் தெரிவித்துள்ளமை ஈழத்தமிழர் மீதுள்ள அன்பைக் காட்டியது. தமிழில் மாத்திரமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழிகளிலும் இவரது இயக்கத்தில் படங்கள் வெளிவந்துள்ளன. பிரபல நடிகரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான சத்தியராஜ் நடிப்பில் சுமார் 25 படங்களுக்கு மேல் இவர் இயக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இயக்குனரும் தமிழ்த் தேசிய உணர்வாளருமான பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர் திரை வசனம் எழுதி தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதி தமிழ்நாட்டு விருதினைப் பெற்றார். இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நூறாவது நாள், 24 மணி நேரம், கோபுரங்கள் சாய்வதில்லை, அமைதிப்படை 1 மற்றும் 2 போன்றவை முக்கியமானவை.
சிறந்த நடிப்பாற்றலால் தமிழ்ச் சினிமாவில் தலை சிறந்த ஒரு குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகராகவும் சிறந்து விளங்கினார்.
தமிழ்த் தேசியம் ஈழ ஆதரவு என துணிச்சலாக பேசுகின்ற ஒரு நல்ல மனிதரை ஈழத்தமிழர் இழந்து நிக்கின்றார்கள். இவரது மறைவுக்கு திரைத்துறையிடம் மட்டுமல்லாது உலகமெங்கும் இருந்து இரங்கல் செய்திகள் வந்தவண்ணமுள்ளன.