இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (24) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த பா.ஜனதா ஆட்சியின்போது, நிதி அமைச்சராக அருண் ஜெட்லி இருந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அண்மையில் நடைபெற்ற தேர்தலிலும்; அருண் ஜெட்லி போட்டியிடவில்லை.
கடந்த 09 ஆம் திகதி அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பிரச்சினை மற்றும் உடல் சோர்வால் பாதிக்கப்பட்ட அவர், உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முதலில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள் அங்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்து அறிந்தனர். பின்னர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் சென்று விசாரித்தார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துகொண்டார்;. அருண் ஜெட்லிக்கு பல்வேறு மருத்துவ நிபுணர்களை கொண்ட குழு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தாலும், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது.
இந்நிலையில், இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அருண் ஜெட்லி காலமானார்.