தமிழக அரசு மீது ஊழல் முறைப்பாடு குறித்த மனுவை ஆளுநரிடம் வழங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். இதன்போதே அ.தி.மு.க. அரசு மீதான 97 பக்க ஊழல் முறைப்பாடு பட்டியலை வழங்கினார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “தமிழக அமைச்சரவை மீதான 97 பக்க ஊழல் முறைப்பாடு பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2018ம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் அனைத்து துறைகளில் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது ஊழல் உள்ள முறைப்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் மனு அளித்தோம்.
முதல்வர், துணை முதல்வர் சொத்துகளை வாங்கி குவித்தது குறித்து முறைப்பாடு மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அ.தி.மு.க.வினர் மீது இலஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் முறைப்பாடு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் மீதான ஊழல் முறைப்பாடுகளுக்கு ஆதாரங்களை திரட்டி வந்துள்ளோம்.
முதல்வர், துணை முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட முடியும். அமைச்சர்கள் மீதான ஊழல் முறைப்பாடு குறித்து முதல் பகுதிதான் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீதான ஊழல் முறைப்பாடு குறித்த 2 ஆவது பகுதி விரைவில் வழங்கப்படும்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.