நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) தொடக்கி வைக்கிறார்.
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமான இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வழியாக தொடக்கி வைக்கவுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ், உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘கோவேக்ஸின்’, பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
முதல் நாளில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2,934 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, முதல் நாளில் மொத்தம் 3,006 மையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் 3 கோடி சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
அதன் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதுக்குக் கீழ் உள்ள நபா்களுக்கும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 1.65 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அவை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சுகாதாரப் பணியாளா்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏப்ரல் மாதத்துக்குள் 4.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.