தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் பிரித்தானிய நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமுலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே, நிரவ் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அவரை நாடு கடத்தும் வழக்கு அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் ஜாமீன் கேட்டு நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் கடந்த மாதம் 8ஆம் திகதி நடைபெற்றன.
இறுதி வாதங்களை பதிவுசெய்துகொண்ட நீதிபதி சாமுவல் கூஸி, “இந்த வழக்கில் பிப்ரவரி 25 ஆம் திகதி தீர்ப்பளிக்கப்படும்’ என அறிவித்தார். அதன்படி இன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.