டெல்லி: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.4% ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை உலுக்கிய கொரோனா இரண்டாம் அலை ஜூலை மாத தொடக்கத்திலிருந்து தணிய ஆரம்பித்தது. தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது. ஆனால் அவ்வப்போது 40 ஆயிரத்திற்கு மேல் செல்வதும் இரண்டு நாட்களில் குறைவதுமாகவே இருந்தது.
வடகிழக்கு மாநிலங்களிலும் கேரளாவிலும் கொரோனா தொற்று உச்சத்திலேயே இருந்ததே அதற்குக் காரணம். அதேபோல தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமலேயே இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியா முழுவதும் மொத்தம் 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு டிரெண்ட் அதிகரித்த வண்ணமே இருப்பதை சுகாதாரத் துறை கண்டறிந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா குறைந்துவரும்போது இம்மாவட்டங்களில் மட்டும் உயர்வது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பதிலேயே கேரளா தான் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. அங்கு 11 மாவட்டங்கள் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றன.
கடந்த வாரம் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டுமே 51.51% கேஸ்கள் பதிவாகின. தமிழ்நாட்டில் 7, இமாச்சலப் பிரதேசத்தில் ஆறு, கர்நாடகாவில் 5, ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2, மேகலயா, மிசோரத்தில் தலா 1 மாவட்டங்கள் கவலையளிக்கக் கூடிய மாவட்டங்களாக உள்ளன.
இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை உயர்த்தி கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார். தமிழ்நாட்டில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.