இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான உறவுகள், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பரஸ்பரம், இருதரப்பு நலன்களைப் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையிலானவை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குறித்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையே கலாசார மற்றும் பொருளாதார பரிமாற்றங்களில் நீண்ட வரலாற்றையும் கொண்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்ஸ், நேற்று (25) இந்தியா பயணித்திருந்தார். இதன்போது ஜெர்மனி பிரதமர் உட்பட அவருடன் வந்துள்ள தூதுக் குழுவை இந்தியப் பிரதமர் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையிலேயே மேற்படி தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்ஸ், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். ஹாம்பர்க் நகரின் மேயராக 2012ஆம் ஆண்டில் அவர் மேற்கொண்ட பயணம், இந்தியாவுக்கு வந்த அவரது முதல் பயணமாகும்.
“இந்திய-ஜெர்மன் உறவுகளின் திறனை அவர் நீண்ட காலத்துக்கு முன்பே புரிந்துகொண்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
“கடந்த ஆண்டு நாங்கள் மூன்று முறை சந்தித்தோம். ஒவ்வொரு முறையும், அவரது, தொலைநோக்குப் பார்வையும் முன்னோக்கிய சிந்தனையும் நமது இருதரப்பு உறவுகளுக்கு புதிய வேகத்தையும் ஆற்றலையும் அளித்தது.
“இன்றைய சந்திப்பிலும் அனைத்து முக்கிய இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக நாங்கள் விவாதித்தோம்.
“உலகின் இரண்டு பெரிய ஜனநாயகப் பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பானது, இந்திய-ஜெர்மன் நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், இன்றைய பதற்றம் நிறைந்த உலகில் ஒரு நேர்மறையான தகவலையும் வெளிப்படுத்துகிறது” என்றார்.