புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் ஒருநாள் முன்னதாகவே வினாத்தாள் வெளியானதால், இந்த ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலும் அம்மனுவை தள்ளுபடி செய்து வழக்கில் ஆஜரான வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் வழக்கறிஞர் மம்தா சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘இந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளது. ஆள்மாறாட்டம் உள்பட முன்னதாகவே வினாத்தாள் வெளியாகி உள்ளது. எனவே இவ்வாண்டு நடந்த நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இம்மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘பல்வேறு குளறுபடிகளுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டு நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்,‘‘பல லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை நாடு முழுவதும் எழுதி உள்ளார்கள். இதுபோன்ற சூழலில் அதனை ஒட்டுமொத்தமாக ரத்து செய்தால் அவர்களை பாதிக்காதா’?.
மேலும் இதுபோன்று மனு தாக்கல் செய்தால் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படும் என உங்களை அணுகியவர்களிடம் ஏன் நீங்கள் எடுத்துரைக்கவில்லை. அது உங்களுக்கு தெரியாதா’?. இந்த விவகாரத்தில் ‘உச்சநீதிமன்றம் முன்பு வழங்கியுள்ள தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளதே’? என சரமாரி கேள்வியெழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். மனுவை தாக்கல் செய்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் விதித்த நீதிபதிகள் மனுதாரர்களிடம் இருந்து பெறக்கூடாது வழக்கறிஞர் தான் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
- புதிய பாடத்திட்டம் மாற்ற முடியாது
‘‘சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில், ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டது என்பது எக்காரணத்தைக் கொண்டும் திரும்பப் பெறப்படாது. புதிய பாடத்திட்டத்து்க்கு மாணவர்கள் தயாராகும் வகையில் நவம்பர் மாதம் நடத்தப்படவிருந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டு, 2022ம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.