டெல்லி: நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததால் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தடுப்பூசி போடும் பணிகள், மருத்துவ கட்டமைப்புகளை தயார்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
நாட்டின் சுகாதார உட்கட்டமைப்புகள், மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நரேந்திர மோடி அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா, மன்சுக் மாண்டவியா, உயரதிகாரிகள், அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டி வந்துக்கொண்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் 1,59,632 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,55,28,004-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 327 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,83,790 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,90,611 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 1 வாரமாக தினசரி பாதிப்பில் 2,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா்.
நேற்று ஒரே நாள் பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது. மேலும் சென்னையில் ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்ப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் மூடப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
மராட்டியத்தில் பிப். 15 வரை பள்ளி, கல்லூரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் நாளை வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை தமிழக முதல்வர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.