கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத்தை கூட்டுவதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி அனுப்பிய பரிந்துரை கடிதத்தை ஆளுநர் ஜெகதீப் தங்கார் திருப்பி அனுப்பியதால் அவர்களுக்கிடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்காருக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில், கடந்த 12ம் தேதி மாநில சட்டசபையை முடக்கி வைப்பதாக ஆளுநர் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்காள அரசு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டசபை முடக்கி வைக்கப்பட்டதாக ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 7ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட, ஆளுநருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை ஆளுநர் ஜெகதீப் தங்கார் திருப்பி அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி சட்டமன்றத்தைக் கூட்ட முதலமைச்சரின் பரிந்துரை மட்டும் போதாது, அமைச்சரவையின் பரிந்துரையும் அவசியம் என்றும் கூறி உள்ளார். ஆளுநரின் இந்த செயலால் மேற்கு வங்காள அரசியலில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.