திங்கள் கிழமை அலர்ஜிக் ஆபத்தானது என வெளியான ஆராச்சி முடிவுகள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இனம், மொழி, நாடு என அனைத்தையும் கடந்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் சில ஒற்றுமைகள் காணப்படும். அதில் ஒன்றுதான் திங்கட்கிழமை அலர்ஜி. பலருக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே இந்த “திங்கட்கிழமை ஃபோபியா” இருக்கும்.
இதை ஆங்கிலத்தில் Monday Blues என அழைக்கிறார்கள். வார விடுமுறையை உற்சாகமாக கழித்துவிட்டு மீண்டும் திங்கட்கிழமை வழக்கமான வேலைகளை செய்ய வேண்டுமே என்ற எண்ணம் அனைவருக்குமே வருவது உண்டு.
தற்போது இந்த விஷயத்தில் தான் மிகப்பெரிய ஆபத்து ஒளிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் ஹெல்த் நிறுவனமும், ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் கல்லூரியும் இணைந்து உலகம் முழுவதிலும் உள்ள 10000 இதய நோயாளிகளை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினர். இதன் ஆய்வு முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
திங்கள்கிழமை பணிக்கு செல்ல வேண்டுமே என்கிற அதீத மன அழுத்தம் தான் இதற்கு காரணமாம். அதாவது, திங்கட்கிழமைகளில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் ரத்த அழுத்தமும், சர்க்கரையும் தானாக அதிகரிக்கிறது. இது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் திடீர் மாரடைப்பு ஏற்படுவதாக அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பணி அழுத்தத்தை சொந்த வாழ்க்கைக்கு கொண்டு வராமல் இருத்தல், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடுதல் போன்றவற்றை கடைப்பிடித்தால் இதுபோன்ற மாரடைப்புகளை தடுக்கலாம் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.