மது, கஞ்சாவுடன் முந்திரிக் காட்டில் நள்ளிரவு நடனம்!
முந்திரிக் காட்டுக்குள், மது போதையில் பெண்களுடன் ஆபாச நடனம் ஆடிய 16 பேரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு, வார இறுதி நாள்களில் பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து இளைஞர்களும் இளம்பெண்களும் படையெடுப்பார்கள். அந்த நாள்களில், புதுச்சேரியில் இருக்கும் மதுபானக் கடைகளில் மது பாட்டில்களை வாங்க ஆண்களும் பெண்களும் வரிசைகட்டி நிற்பார்கள்.
அதேபோல, அன்றைய தினத்தில் முட்டுச்சந்தில் இருக்கும் சாதாரண தங்கும் விடுதிகளில்கூட அறைகள் வாடகைக்குக் கிடைக்காது. அதனால், புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதிகளான கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் முளைத்திருக்கின்றன.
இப்படியான இளைஞர்களை இணையம் மூலம் டார்கெட் செய்து, ஆரோவில் பகுதியில் ஒரு கும்பல் இரவு நேரத்தில் ஆபாச நடனம் மற்றும் மது விருந்து நிகழ்ச்சி நடத்தி பணம் சம்பாதித்துக்கொண்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்குத் தகவல் சென்றது.
அதனடிப்படையில், நேற்று நள்ளிரவு விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமாரின் தலைமையில், ஆரோவில் காட்டுப் பகுதியில் காவல்துறையினர் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது ,ஆலங்குப்பம் என்ற பகுதியில் உள்ள அடர்ந்த முந்திரிக் காட்டில் மேடை அமைத்து, மின் விளக்குகள் மற்றும் இசையைப் போட்டு, அதில் மது போதையில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும் சுற்றிவளைத்தனர். அப்போது, அவர்களிடம் புதுச்சேரி மது பாட்டில்கள், கஞ்சாப் பொட்டலங்கள், இசைக்கருவிகள் போன்றவற்றையும் பறிமுதல்செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த 16 பேரைக் கைதுசெய்ததோடு, சட்ட விரோதமாக இசை நிகழ்ச்சி நடத்தியது, அயல் மாநில மது வகைகளைப் பயன்படுத்தியது போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், ’அரோரா’ என்ற பெயரில் இணையம் இசைக்குழுவை ஆரம்பித்திருக்கிறார். அதன்மூலம் தனது நண்பர்களை இணைத்து, ஆபாச நடனம் மற்றும் மதுவை வழங்கி பணம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் பண ஆசை அதிகமாகவே, ஆரோவில் பகுதியில் அடர்ந்த முந்திரிக் காட்டின் நடுவில் உள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, ஆபாச நிகழ்ச்சியை நடத்திவந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு, இணையவழி புக்கிங் மற்றும் அந்த இடத்திற்குச் செல்வதற்கான மேப் உள்ளிட்டவற்றையும் இணையத்தில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது.
நன்றி – vikatan