மேற்கு வங்காளத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “இந்த மாநிலத்தின் முதலமைச்சராக கூறுகிறேன்.
நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். அதை யாரும் மாற்ற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றை மேற்கு வங்காளத்தில் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
இவை அனைத்தும் மக்களை மாநிலத்தை விட்டு வெளியேற்றுவதற்காக பா.ஜனதா நடத்தி வரும் சூழ்ச்சி ஆகும். வெளிமாநிலத்தவர்கள் மூலம் வீடு வீடாக சென்று பா.ஜனதா கட்சி பிரிவினை பிரசாரங்களை மேற்கொள்கிறது. தனது பிரித்தாளும் அரசியல் மூலம் ‘மதுவா’ குடும்பத்தை பிரித்துள்ளது.
பிரித்தாளும் அரசியல் மூலம் நாட்டை பா.ஜனதா அழித்துவிட்டது. ஆனால் மேற்கு வங்காளத்தை குஜராத்தாக மாற்றுவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.