தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு காணொளி வழியாக உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது, “உலகம் மற்றொரு தொழில்புரட்சிக்கு தயாராகி வருகிறது.
இதனால், நமது நாடு நிர்ணயித்த இலக்குகளை அடைய நாம் தயாராகி அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் இந்தியா தனது பொருளாதாரத்தை திறம்பட கையாண்டது.
உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தை நம்புகின்றன. கொரோனா காலத்தில், உலக நாடுகள் பல தடைகளை சந்தித்த போதும் இந்தியாவில் அன்னிய முதலீடு அதிகரித்தது.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறைகளில் முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும். அந்த துறையில், தனியார் துறையினர் முதலீடு செய்ய வேண்டும்.
நமது நாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால் இல்லை. அதனை எவ்வளவு காலத்தில் அடைகிறோம் என்பது முக்கியம்.
தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாற தொழில்துறையினர் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இந்தியா குறித்த உலக நாடுகளின் பார்வையை, மத்திய அரசு செய்த சீர்திருத்தங்கள் மாற்றியுள்ளன.
இந்தியாவில் ஏன் என்ற நிலையில் இருந்து இந்தியாவில் ஏன் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி நாம் நகர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.