“”வையம் வென்றாய், எல்லை உனக்கில்லை தலைவா…” என நடிகர் ரஜினிகாந்தைப் பாராட்டி இடம் பெறும் “கோச்சடையான்’ படத்தின் பாடல் திங்கள்கிழமை வெளியானது. வீர சாகசங்கள் நிறைந்த தமிழ் மன்னரின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் படம் “கோச்சடையான்’. தந்தை, மகன் என இரு வேடங்கள் ஏற்று ரஜினிகாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா, தீபிகா படுகோன் நடிக்கின்றனர். ஜாக்கி ஷெராப், ஆதி, சரத்குமார், ருக்மணி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடிக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த மாதம் படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில், ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி கோச்சடையான் படம் வெளியாகிறது. இந்தநிலையில் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இணைய தளங்களில் வெளியிடப்பட்ட இப்பாடலில் ரஜினியை பாராட்டுவது போல் வரிகள் இடம் பெற்றுள்ளன.
“”வாழ்வில் நின்றாய்… வையம் வென்றாய்… எல்லை உனக்கில்லை தலைவா…” என அந்தப் பாடல் தொடங்குகிறது. வைரமுத்து வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இப்பாடலுக்கு குரல் கொடுத்துள்ளார்.