அண்மையில் தற்கொலை செய்துகொள்வதற்கான காரணமாகப் பேசப்படுகின்ற பேஸ்புக் எனும் முகநூல் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஹெட்டிப்பொல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விழாவொன்றின் போது, “பேஸ்புக் போகின்ற போக்கு சரியில்லை” என கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நான் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்னரேயே எதிர்வுகூறினேன்… பேஸ்புக் போகின்ற போக்கு சரியில்லை என. பெற்றோர் இவ்விடயத்தில் கூடுதலான கரிசனை காட்ட வேண்டும்.
பிள்ளைகள் இதுதொடர்பில் பூரண தெளிவுபெற வேண்டும். அதற்காக நாங்கள் பேஸ்புக்கினால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றி சதா சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நல்லவற்றை மட்டும் தேர்ந்து, அதனைக் கைக்கொண்டு தீயவற்றை புறமொதுக்கி செயற்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணைய வேண்டும்.
இந்தப் பெற்றோர்கள், நாங்கள் எல்லோரும் எதனைத்தான் செய்தாலும், கடைசியில் இந்நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள சிறுவர்களுக்கு நாங்கள் தீய வழியைக் காட்டினால், கால் போகின்ற போக்கில் போகவிட்டால் சத்தியமாக இந்நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.