மாநகர பஸ்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று(ஜூன் 6) நடத்திய திடீர் ஆய்வில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக ரூ. 91 ஆயிரத்து 150 வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களைப் பிடிப்பதற்காக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம். போக்குவரத்துக்கழக ஆய்வாளர்கள் முக்கிய வழித் தடங்களில் தொடர் டிக்கெட் சோதனையிலும் ஈடுபடுவர்.
இந்த நிலையில் மாநகரப் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் தலைமையில் பணிமனை மேலாளர்கள், 200 கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டகுழு சென்னை மாநகரம் முழுவதும் 82 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.
பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்த காலை 8 மணி முதல் 11 மணி வரையும் பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இதில் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 91 ஆயிரத்து 150 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.