தனி நாடு கோரிக்கையை கைவிடுவதுடன் ஒருங்கிணைந்த இலங்கையை ஏற்றுக் கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் சிங்கள தேசியவாத அமைப்புகள் சார்பில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில், “இலங்கையை இரண்டாகப் பிரித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தனி நாடு உருவாக்க வேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நோக்கமாகும். இதை தேர்தல் அறிக்கையாக கடந்த ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண தேர்தலின்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைத்து இருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு மீதான விசாரணை இலங்கை உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் எழுத்துப் பூர்வமாக உறுதிச்சான்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “இலங்கையை ஒற்றை ஆட்சியுடைய நாடாக ஏற்றுக் கொள்வதாகவும், இலங்கையை இரண்டாகப் பிரிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் மிதவாத தமிழ் இயக்கங்கள் இணைந்து கடந்த 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது