உலக அளவில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, மூன்றாவது இடத்தில் இருப்பதாக ஐ.நா. தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா.வின் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள நாடுகளில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
2013-ஆம் ஆண்டு முடிவில், இந்தியாவில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் 21 லட்சம். அதாவது, ஆசிய – பசிபிக் பகுதியில் இந்தப் பாதிப்பு உள்ளவர்களில் 10-ல் நான்கு பேர் இந்தியர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
தற்போதைய ஆய்வின்படி, உலக அளவில் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சம். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் பேர் மட்டுமே தங்கள் நோயின் தன்மை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, உலகில் எய்ட்ஸை முற்றிலும் ஒழிப்பது என்பது 2030-ல்தான் சாத்தியம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்தியாவைப் பொருத்தவரையில், புதிதாக எச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கையில் 19 சதவீதம் சரிந்துள்ளது என்பது சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
உலக அளவில் எச்.ஐ.வி. பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், நைஜீரியா இரண்டாம் இடத்திலும் உள்ளன.