செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 15 | அன்னபூரணி | டாக்டர் ரி. கோபிசங்கர்

6 minutes read

“போனகிழமை தான் படம் பாத்தனி, திருப்பியும் என்ன சீலைக்கு…. “ எண்டு தொடங்க, ஓம் அப்பிடியே சீலையும் எடுத்துக் கொண்டு வருவம் வருசத்திக்கு எண்டு செல்லமாக்கா சண்முகத்தாருக்கு உறுதியா சொல்லிப்போட்டா. மனிசி சொல்லிறதை தட்டிக் கேக்ககிற ஆம்பிளை ஒருத்ததரும் பிறக்ககிறதில்லை எண்டதால சண்முகத்தாரும் சரண்டர் ஆனார். முந்தி சண்முகத்தாரும் லேசில விட மாட்டார். மனிசியைப் பேசத் தொடங்கினா ஒழுங்கை முடக்கு வரை பேசிக்கொண்டே போவார். ஆனால் போன மாசம் பொயிலையோட சேத்து மற்றச் சாமாங்கள் ஏத்த வந்த ஜெயசிங்கவோட கள்ளு அடிக்கேக்க, சண்முகத்தார் மனிசீன்டை ஏதோ கேக்கப்போய் ரெண்டு பானை உடைய, இவர் சங்கடப்பட அவன்
“ஹம கானிம எக்காய் நம வித்தறாய் வெனஸ்“ (எல்லா மனிசியும் ஒண்டு தான் அவனவன்டை மனிசிமாருக்கு ஒவ்வொரு பேர்) எண்ட ஒரு உலக உண்மையச் சொன்னான். அதுக்குப் பிறகு இவர் யோகர் சுவாமி சிஸ்யன் மாதிரி சும்மா இருப்பதே சுகம் எண்ட முடிவுக்கு வந்தார்.

சண்டை தொடங்கி செல்லமாக்கா சன்னதம் ஆட வெளிக்கிட்டா புரக்கிராசியார் தோம்பு ஆராஞ்ச மாதிரி நாலு சந்ததியும் சந்திக்கு வரும், ஆன படியால் சண்முகத்தார் ஒண்டும் பறையாம ஓம் எண்டார். போனமுறை போகேக்கை “திரைக்கு வருகிறது நிறம் மாறாத பூக்கள் “எண்ட போர்டை பாத்தோண்ணையே மனிசி முடிவெடித்திட்டுது எண்டு நெச்சபடி சண்முகத்தாரும் படம் பாக்க ரெடி ஆனார். இனி என்ன நாலு குடும்பத்தைச் சேத்துப் போனாத்தான் சுகம் எண்டு போட்டு அக்கம் பக்கம் ஆள் சேத்தார் சண்முகத்தார்.

புதுப்படம் எண்ட படியால் 5 show போடுவாங்கள் வேளைக்கு வெளிக்கிட்டால் தான் வசதியா இருக்கும், போனமுறை மூண்டாவது றோவில இருந்து நான் பட்ட பாடு; ஒரே விசிலடியும், சிகரட் மணமும், மூட்டைப்பூச்சி வேற, நிமிந்து இருந்து பாத்து கழுத்து நோ எண்டு செல்ம்மாக்கா புலம்ப சண்முகத்தார் சாரத்தை மாத்தி வேட்டியைக் கட்டினார்.

போட்டு வந்து விடிய செக்குக்கு எள்ளுக் குடுக்க வேண்டும் எண்ட யோசினையோட தியட்டருக்கு பக்கத்து பாரின்டை சந்தோசத்தில சண்முகத்தாரும் படம் பாக்கப் பத்துப் பேரும் வெளிக்கிட்டிச்சினம்.

நேத்துப் போட்டு வந்தவங்களிட்டை நிலமையை கேட்டுப் போட்டுத்தான் வந்தனான் எண்டு கனகலிங்கம் சொல்ல எல்லாரும் வெளிக்கிட்டம் சன்னதியானைக் கும்பிட்ட படி.

சண்முகத்தார் இந்த முறை செலவைப் பாக்காம ODC ரிக்கற் எடுத்தார். அபிசேக ஆராதனையோட படம் தொடங்கி முடியும் வரை செல்லம்மாக்கா கதைக்கேல்லை ஆன படியால் இது நல்ல படமாத் தான் இருக்கும் என சண்முகத்தார் முடிவுக்கு வந்தார். படத்தின்டை பாதிப்போட கதைக்காம அமைதியா வந்த மனிசியைப் பாத்திட்டு யோசிச்சார், உந்த ரீலை வாங்கி்க் கொண்டு போய் ஒவ்வொரு நாளும் போட்டுக் காட்டினா எப்பிடி இருக்கும் வீடு எண்டு. அழுதும் அழாமலும் வந்த செல்லம்மாக்கா கடையை மறத்திட்டா எண்ட சண்முகத்தார் முடிவெடுக்க, திடீரெண்டு தொடங்கினா “எப்பிடியும நல்லதா ஒரு பத்துச் சீலை எடுப்பம்“ எண்டு.

என்னெண்டு தான் உந்தப் பெண்டுகள் டக்டக்கெண்டு மாறுறாளவையோ எண்டு யோசிச்சுக் கொண்டு சண்முகத்தார் கடைப்பக்கம போக, கடைக்காரன் கண்டோன்னயே கதிரையைப்போட்டு வெளீல இருத்தி வைச்சான் போன ஆம்பிளைகளை. நித்திரை வரத் தொடங்க நேரத்தைப் பாத்திட்டு சண்முகத்தார் அந்தரப்பட, தனக்கும் சண்முகத்தாருக்கும் சம்மந்தம் இல்லை எண்ட மாதிரி செல்லம்மாக்கா சீலைய மட்டும் பாத்துக்கொண்டு இருந்தா. சீலை எண்டு தொடங்கி, வேட்டி சாரம் எல்லாம் வாங்கீட்டு லக்கேஜைப் பற்றிக் கவலைப் படாமல் செல்லமாக்கா வயித்தைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினா. வெளீல வந்து இட்டலியும் வடையும் சாப்பிட்டிட்டு கோப்பியும் குடிச்சிட்டு வெளிக்கிட்டிச்சினம் எல்லாரும்.

ஓவர் speed ஆப் போனாத்தான் பிடி படாமல் போகலாம் எண்டு ஆரோ சொல்ல வேகம் கொஞ்சம் கூடிச்சிது…. அணியத்தில நிண்ட படி யாரும் வாறானோ எண்டு சண்முகத்தார் உத்துப்பாத்த படி வந்தார். சண்முகத்தார் தண்டயல் தம்பிப்பிள்ளைக்கு சொந்தக்காரர், அதால தான் தன்டை38 அடி கொட்டுக்கு (வள்ளத்துக்கு) அம்மான்டையோ மனிசீன்டையோ பேரை வைக்காமல் அன்னபூரணி எண்டு வைச்சவர். வாங்கின சாமாங்களை தண்ணி படாம படங்கு போட்டு சுத்தி காத்துக்கு பறக்காம பாரத்துக்கு துடுப்பையும் மேல வைச்சா செல்லம்மாக்கா. விட்ட சுருட்டுப் புகையின்டை திசையையும் காத்தில கரைஞ்ச நேரத்தையும் பாத்து வேகத்தை கூட்டிக்குறைச்சு விடிவெள்ளி பாத்து வீட்டை வந்து சேர விடயச் சாமம் ஆகீட்டிது.

அன்னபூரணி உட்பட்ட வல்வை கடலியலின் படத்தொகுப்பு

ஆறு மணிக்கு வெளி்க்கிட்டு காரைக்காலுக்குப் போய் ஒம்பது மணிக்கு second show பாத்திட்டு கொண்டு போன சவுக்காரம், தேங்காய் எண்ணை, கறுவா, கராம்பு, ஏலக்காய் எல்லாம் குடுத்திட்டு சீலை, சாரம், சம்பா அரிசி, பட்டும் அலுமினியமும் ஏத்திக்கொண்டு வாறது வழமை. திரும்பி ஐஞ்சு மணிக்கெல்லாம் வீட்டை வந்திடலாம். இந்த ஏற்றுமதி இறக்குமதி விளையாட்டில போட்டி பொறமை கூட, போட்டுக் குடுக்கிறதும் கூடிச்சிது. Dummy ஆ ஒரு போட்டை அனுப்பி நிலமையைப் பாத்துத் தான் உண்மையா வெளிக்கிடிறது. பனை மரத்தில ஏறி நிண்டு star toffee கவரால torch ஐ மறைச்சு பச்சை, சிவப்பு எண்டு காட்டிற சிக்னலைப் பாத்துத் தான் போய் வாறது. வாற boat ஐ விட்டுக்கலைச்சுக் கொண்டு வந்த சேர முதல் சாமாங்களை இறக்கிக் கொண்டு போயிடிவினம், இறங்கின சாமாங்கள் எந்த வீட்டை போனது எண்டு ஆராலேம் பிடிக்கேலாது ஏனெண்டால் எல்லா வீடும் ஒரே மாதிரித் தான் கட்டி இருந்தது. கடலிலை வாற boat க்கு கால்வாய் மாரி வெட்டி நேர வீட்டுக்குள்ளேயே விடீற மாதிரி ஒரு set up முந்தி இருந்தது எண்டு கதை இருந்தது.

இப்பிடி ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செயதிட்டு இப்ப ஆழ்கடல் எனும் வினைத்தொகையின் எதிர்கால நம்பிக்கையில் இப்பவும் சண்முகத்தாரும் செல்ம்மாக்காவும் இருக்கினம்.

வைத்தியநிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கர் – யாழ்ப்பாணம்

பி.கு: அன்னபூரணி அம்மாள் என்ற பாயக்கப்பல் 1938 இல் வல்வெட்டித் துறையிலிருந்து வெற்றிகரமாக அமெரிக்காவில் பொஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் தலைமை மாலுமியாக இருந்தவர் தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிபிள்ளை என்பவர் ஆவார்.

வினைத்தொகை ஆழ்கடல்
ஆண்ட கடல்
ஆழுகின்ற கடல்
ஆழப்போகின்ற கடல்

சுவடுகள் இதுவரை வெளியான தொடர்கள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 07 | போதி மரம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 08 | பூதம் கிளம்பிச்சு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 09 | ஆயிரம் பொய் சொல்லி | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 10 | கலியாணத்தண்டு மழை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 11 | கனவிலேம் நித்திரை | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 12 | துடக்கில்லாத கற்கண்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 13 | கம்மாரிசு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 14 | ஹர்த்தால் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More