Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 06 | ஒரு குமரை கரை சேக்கிறது | டாக்டர் ரி. கோபிசங்கர்

8 minutes read

நீளமான ஒரு மட்டப் பலகை, சின்ன கைபிடி போட்ட மட்டப் பலகை ( மணியாஸ் கட்டை), சாந்தேப்பை மற்ற எல்லாச் சாமாங்களையும் எடுத்துக்கொண்டு வயிரவர் கோயிலடிக்கு வந்து, ”இண்டைக்கு பத்துப்பேராவது வேணும் எண்டனான் சின்ராசு “எண்டு நான் ஞாபகப்படுத்த, ஓம் எடுபிடிக்கும் இன்னுமொருத்தன் புதுசா வாறான்” எண்டார் சின்ராசு.

புதுசா வாறவன் கீழ மட்டும் வேலை செய்யட்டும் நல்லாப் பழகும் வரை சாரத்தில ஏற விட வேண்டாம். அவனுக்கும் சேத்து அரை றாத்தல் பாண் வாங்கும் எண்டு சொல்லி புது வரவை apprentice ஆக சேத்துக்கொண்டு வேலைக்கு வெளிக்கிட விடிய ஆறு மணி தாண்டீட்டு. 

கல்லுண்டா வெளியால கஸ்டப் பட்டு எதிர்க்காத்தில சைக்கிள் உழக்கி கட்டிற வீட்டடிக்கு வர, அராலி மேசன் மார் எண்டால் மேசன் மார் தான் எண்டு கட்டிற வீட்டுக்கு கண் படுற கதை கதைக்கிறாக்களின்டை கதையை கேட்டு கர்வப்பட்டு ஆனாலும், போன உடனயே கட்டிற வீட்டை  தெரியாம கட்டின முன் படங்கை கொஞ்சம் உயத்திக் கட்டீட்டு கண் திருஸ்டி வெருளியும் இருக்குதா எண்டதை பாத்திட்டுத்தான் வேலையை தொடங்கினன், நான் கந்தசாமி. 

எண்பதுகளில வீடு கட்டேக்க Draughtsman கீறின படத்துக்கு, நிறைய சாத்திர முறைகளும் சில வாஸ்து முறைகளும் பாத்து, நாள் பாத்து அத்திவாரம், நாள் பாத்து சாமியறை நிலை எண்டு நிறைய நாள்  பாத்து  காசுக் கணக்குப் பாத்து, மனிசீன்டை ஆசை பாத்து  பெருமையோடு தான் ஒவ்வொரு சாஐகான்களும் வீடு கட்டுறவை.

வேலை துடங்க முதல் கட்டிடத்தின்டை நிலையங்கள் எடுக்கிறது வழமை. அதுக்கும் ஒரு நல்ல நாள் பாத்து நிலையம் எடுக்கிறவர் வந்து இடம் அளவுகள் எல்லாம் குறிச்சுத் தருவார். அப்ப அளவெட்டி விநாசித்தம்பியர் தான் இதில கெட்டிக்காரர். நிலையம் எடுக்கிறது எண்டால் அதில கன விசயம் இருக்கு . ஒழுங்கை, ரோடு இருக்கிற பக்கம், வீட்டு வாசல் பாக்கிற திசை,  மண், நீர் வாட்டம், பக்கத்தில இருக்கிற கோயில் குளம் எல்லாத்தையும் பாத்து தான் நிலையம் சொல்லுவினம். வீட்டு வாசல், சாமியறை, அடுப்படி வாற  அக்கினி மூலை, கிணறு எண்டு எல்லாத்தையும் குறிச்சு தருவினம். குசினீல இருந்து பாத்தா சாமியறை விளக்கு தெரியவேணும். சாமி அறை தான் பெரிய அறையா இருக்கும், அதிண்டை அகலத்திலும் பாக்க எந்த அறையும் விறாந்தையும் அகலத்தில கூடப்பிடாது இப்பிடி பல சம்பிரதாயங்கள் இருந்தது.

அப்ப இஞ்சினியர் மார் கனபேர் civil தான் படிச்சவை.  ஆனாலும் அப்ப படிச்ச எந்த இஞ்சினியர் மாரும் ஊரில வேலை செய்ததாகவோ வீடு கட்டினதாகவோ தெரியேல்லை. எண்ணெய் எடுக்கிறம் எண்டு எல்லாரும் வெளிக்கிட்டு போயிட்டினம். பொம்பிளை குடுக்கேக்க டாக்குத்தர், அப்புக்காத்து, accountant, clerk எண்டு தான் பாக்கிறவை educated மேசன் மாருக்கு பெரிய கேள்வி இல்லை. இப்பவும் தானே எண்டு யாரோ கேக்கிறது மாதிரி இருக்கு. இஞ்சினியர் மார் என்னதான் படத்தை கீறி, டேப்பை பிடிச்சு அளந்தளந்து இடிச்சு இடிச்சுக் கட்டினாலும், அப்ப  சாத்திரியர் நிலையத்தை எடுத்து தர கண்மட்டத்தில தூக்குக்குண்டும் நீர் மட்டமும் வைச்சு  கட்டின கட்டிடம் எல்லாம் இப்பவும் அப்பிடியே இருக்குது. 

வீடு கட்ட முதல் கிணறு வெட்டி, தண்ணி கண்டு பட்டை கட்டித்தான் வீடு கட்ட தொடங்கிறது. 

வெட்டின தும்புத்தடி துண்டுகளை அடிச்சு இறுக்கி ,சீமெந்து நூலை இழுத்துக் கட்டிப்போட்டு தான் அத்திவாரம் வெட்டத்தொடங்கிறது. அதோட கல்லரியிற வேலையும் தொடங்கும், அப்ப ஆறு இஞ்சி, அஞ்சிஞ்சி தான் கல்லு ( அப்பவே செல்லடிப்பாங்கள் எண்டு தெரியும் போல). 

அத்திவாரம் வெட்டி,  நாள் பாத்து அதை கட்டி பிறகு கல்லு வைச்சு சிவரை  கடகட வெண்டு கட்டிக்ககொண்டர ஆசாரி மார் கதவு நிலை யன்னல் அளவுகளை கொண்டு வருவினம். முதல்ல வைக்கிறது சாமி அறை நிலை, யன்னல் தான். எல்லாத்துக்கும் நாள் பாத்து காரியம் செயிறதுக்கு காரணம்இருந்தது. அட்டமி நவமீல புது வேலை தொடங்கிறேல்லை எண்ட படியால வேலை காரருக்கு leave கிடைக்கும். நாள் வேலை  செய்யேக்க பொங்கல் படையல் வைக்கிறதால வேலை காரருக்கு சாப்பாடும் கிடைக்கும்.

அப்ப எல்லாம், நாள் கூலிதான். எட்டு மணிக்குள்ள  வந்து உடுப்பு மாத்தீட்டு வேலை தொடங்கீடுவம். கடகம், சீமெந்து வாளி, சீமைந்தை வைச்சு பூச barrel ன்டை அடித்தட்டு  எல்லாத்தையும் எடுத்து வைச்சட்டு மேல ஏறி நிண்டு கட்டி இருக்கிற சாரமரங்களை check பண்ணினாப்பிறகு தான் வேலை தொடங்கும். அண்டைக்குரிய வேலைக்கு ஏத்த மாதிரி தேவையான கலவை mixture ஐ  சொல்ல  பழைய பெயின்ற் வாழியில தண்ணியை கொண்டுவந்த சீமெந்தை குழைக்கத் தொடங்க வேலை சூடு பிடிக்கும். அத்திவாரத்துக்கு , சுவருக்கு, பூச்சுக்கு எண்டு கலவை mixture எல்லாம் மனக்கணக்கு தான். கண்டாவளை மண், நாகர் கோவில் மண், பூநரி மண், அரியாலை மண் எண்டு ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு தேவைக்கு இருக்கும்.

பத்து மணிக்கும் மூண்டு மணிக்கும்  ரீ பிரேக். அலுமினியக் கேத்தில் பிளேன் ரீ ஓட நாலு டம்ளர் கழுவாமலே சுத்த, அதோட ஒரே பீடி பலவாய்க்குள்ள போய் வரும். மத்தியானம் கொண்டந்ததை கலந்து சாப்பிட்டிட்டு சீமெந்து பாக்குக்கு மேல கொஞ்சநேரம் சரிஞ்சிட்டு திருப்பி வேலை தொடங்கி, பின்னேரம் நாலரைக்கு சாமாங்கள் எல்லாம் கழுவி எடுத்து வைச்சிட்டு உடுப்பு மாத்தி வெளிக்கிட மணி ஐஞ்சாகீடும். காத்தோடு சேந்து உழக்கி காசீன்டை கள்ளுக்கொட்டிலில கொஞ்சம் நிண்டிட்டு வீட்டை வர ஏழு தாண்டீடும்.

விதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி  வீடு விற்பனைக்கு, – Re/Max North Realty

ஒவ்வொரு கிழமையும்  வாங்கின வாங்கப்போற சாமாங்ககளுக்கு கணக்குப்பாத்து, சம்பளம் வாங்கி கொந்திறாத்து காசை எடுத்து கூலிக்கணக்கை பிரிச்சுக் குடுத்திட்டு ஞாயித்துக் கிழமையில காசிக்கும் லீவு விட்டிட்டு வீட்ட வேளைக்கு போய் பிள்ளைகளை நித்திரையாக்கீட்டு, மனிசியை தொட முதல்ல புது சீமெந்து பாக் மாதிரி இறுக்கமாக இருந்த மனிசி, நான் கொஞ்சம் இறுக்க, குழைச்ச சீமெந்து மாதிரி இளகத்தொடங்கினா. 

காலமை எழும்பி மறக்காம போய் புதுசா வந்தவன்னடை தாயிட்டை கூலிக்காசை குடுத்திட்டு என்னவாம் மோன் எண்டு விசாரிச்சிட்டு வேலைக்கு வெளிக்கிட, சின்னராசு வந்து வேலீக்க நிக்குது. “அம்மாவுக்கு சேடம் இழுக்குது ,ஏதும் எண்டால் உடன எடுக்கவும் வேணும்” எண்டு தலையை சொறிய, எனக்கெண்டு பிடிச்சு வைச்ச கொந்திறாத்து காசில கொஞ்சம் எடுத்து குடுத்திட்டு ஒரு எட்டுப் போய் கிழவியை பாத்திட்டு ஏதும் எண்டால் சொல்லி அனுப்பு எண்டிட்டு நான் வேலைக்கு வர கொஞ்சம் பிந்தீட்டு. சின்ராசின்டை தாய்க்கு கடுமையாம் எண்டு கொஞ்சம் முதலே வந்த சின்னவன் சொன்னவன், எண்டு வீட்டக்கா நான் பிந்தினதுக்கு அவவே காரணம் சொல்ல, மீண்டும் வேலை தொடங்கினன். 

அண்ணை சின்னவன் குழைக்க கேக்கிறான் விடட்டே, எண்டான் மோகன். சரி நான் பாத்துக்கொள்ளுறன் நீ இந்தா இப்பிடி கம்பியை வளை எண்டு குடுத்திட்டு பூச்சை பாக்க போனன். ஒரு வருசமாவது முட்டாள் வேலை செய்தாத்தான் அவன் வேலை பழகி மேசன் வேலை தொடங்கலாம். திடீரெண்டு சின்ராசின்டை நினைப்பு வந்தது. அவன் நல்ல வேலைகாரன் இருந்தால் எல்லாரையும் நல்லா வேலை வாங்குவான் . “ அடுத்த வீட்டுக்கு அவனை தலைமேசனாத் தனிய விடவேணும் “, எண்டு யோச்சபடி பூச்சை தொடர்ந்தேன். 

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் வீடு வாடகைக்கு – Re/Max North Realty

வாறகிழமை சுவர் எழும்பீடும்,  கோப்புசம் போடச்  சொல்லீட்டன் மரத்துக்கு காசு கேக்கிறான், ஒட்டிசுட்டானில இருந்து லொறி ஒண்டு வருதாம் நல்ல தேக்கும் இருக்குதாம் எண்டு ஐயா பின்னேரம் வர சொன்னன். முதலே தெரிஞ்ச மாதிரி கொண்டந்த காசைத் தந்திட்டு, “நாள் வைச்சிட்டன் வைகாசி எங்கடை அம்மன்டை பொங்கலுக்கு நானும் பால் காச்சோனும் “ எண்டார். 

பங்குனி பிறக்க அடுத்த  வீட்டின்டை நாள் வேலை தொடங்க வேணும் அப்ப தான் அடுத்த மழைக்கு முதல் மற்ற வேலையை முடிக்கலாம் எண்டு அடுத்த குமரைப்பற்றியும்   யோச்சுக்கொண்டிருக்க, “அண்ணை இன்னும் ரெண்டு சீமெந்துப் பக்கற் குழைக்கட்டா எண்டு “ சின்னவன் கேட்டான். வேலயை கெதியண்டு முடிக்ககோணும் எண்ட யோசனையோட ஓம் போடு எண்டு சொல்லி வீட்டை நிமிந்து  பாக்க, கலியாணத்தை வைச்சிட்டு நாள் கிட்டக்கிட்ட வர வாற மாதிரி உள்ளுக்குள்ள ஒரு பயம் வரத்தொடங்கிச்சு.

கோப்புசமும் மூலைக்கையும் வைக்கேக்க  கொழுக்கட்டை படையல் போட்டு, ஒவ்வொரு அடி உயரத்துக்கும் ஆறு இஞ்சி சரிவை கூரைக்கு வைச்சு, கூரை வேலை முடிக்கேக்க தான் நம்பிக்கை வந்திச்சு நேரத்துக்கு வேலை முடிக்கலாம் எண்டு. இந்தியாவில இருந்து வாற நந்தி ஓடு தேடி வாங்கி அடுக்கிப் போட்டு சிலாகையால தட்டி இடைவெளி இல்லாமல் இறக்கிப்போட்டு முகட்டு ஓட்டை பூச வெளிக்கிட்டன். குசினிக்க கிழக்க  பாக்கிற மாதிரி அடுப்பைக்கட்டி, புகைக்கூட்டை கூரைக்கு மேல உயத்திக் கட்டி முடிக்க, 

நிலத்தில பெட்டி அடிச்சு கம்பி அடுக்கி சீமெந்து போட்டு இறுக்கி மூண்டு பிளட் ( flat) செய்யிறது புகைக்கூட்டுக்கு மேல போட. அதை கயித்தக்கட்டி ஏத்தி மேல வைக்கஒரு பெரிய வேலை முடிஞ்சுது. மேல் வேலை எல்லாம் முடிச்சிட்டு தான் நிலம் இழுக்கிறது. 

இரும்பு மொங்கான் போட்டு இறுக்கி, வாட்டம் வைச்சு நிலம் பூச்சிழுத்திட்டு மட்டம் பாத்து கதவுகள் சீவிப்போடத்தொடங்க வீட்டுக்காரர் வந்து சாந்தி செய்யிறதை பற்றிச் சொன்னார். கிணத்தடி வக்கில காவியை போட்டு வீட்டு சிவருக்கு வெள்ளையும், புகைக்கூடுக்கும் முன் சிவருக்கும் மஞ்சள் கலந்து அடிச்சு முடிக்க தான் வீட்டுக்கு களை வந்திச்சுது.

கிணத்தை இறைச்சு வீட்டைக்கழுவி வீடு குடிபூர வீட்டுக்காரர் ஆயத்தமாக, பொம்பிளைப்பிள்ளைக்கு கலியாணம் முடிஞ்சாப் பிறகு கால் மாறிப்போகேக்க அவளை மாப்பிள்ளை வீட்டை விட்டுட்டு வெளிக்கிட்டு வரேக்க அப்பாமாருக்கு  வாற சந்தோசம் கலந்த கண்ணீரோட அந்த புதுவீட்டை விட்டிட்டு வந்து அடுத்த குமரை கரைசேக்கிறதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினன். 

பி.கு:

கல்யாணத்தை கட்டிப்பார் வீட்டைக்கட்டப்பார் எண்டு ஊரில சொல்லிறவை, நான் நினைச்சன் கட்டிறதிலை இருக்கிற கஸ்டத்தை சொல்லினம் எண்டு, இல்லை கட்டினதை maintain பண்ணிற கஸ்டத்தை தான் எண்டு ரெண்டையும் கட்டினாப்பிறகுதான் விளங்கிச்சு.

வைத்திய நிபுணர் டாக்டர் ரி. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

சுவடுகள் தொடரின் முன்னைய பதிவுகள்

சுவடுகள் 01 | இது ஒரு சுளகு மான்மியம் | டாக்கடர் ரி கோபிசங்கர்

சுவடுகள் 02 | புட்டு | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 03 | தடை தாண்டிய பயணங்கள் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 04 | மணியண்ணை ரைட் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சுவடுகள் 05 | ‘கள்ள மாங்காயின் சுவை தெரியுமா?’ | மா(ன்)மியம் | டாக்டர் ரி. கோபிசங்கர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More