செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ளத் தயாராகும் தமிழ்த் தேசியக் கட்சிகள்!

2 minutes read

தமிழ்த் தரப்புக்கள் கடந்த காலங்களில் பிரிந்து நின்று தேர்தல்களை எதிர்கொண்டமையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இதில் பல சாதகமான இணக்கங்கள் எட்டப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனின் நல்லூரிலுள்ள இல்லத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒன்றுபட்டு எதிர்கொள்வது தொடர்பிலான மக்களின் அபிப்பிராயம் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார். அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் தனது கட்சியுடன் கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருத்தை ஆதரித்தே கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பிரிந்து போட்டியிட்டமையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

தற்போதுள்ள முறைமையில் எவ்வாறு ஒன்றுபட்டு போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேச்சு நடத்தி ஒருமித்து களமிறங்குவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்களில் தொடர்ந்து பங்கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்தியஸ்தத்தை கோருவது தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட விக்னேஸ்வரன்,

“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாகவும் நாங்கள் இந்தக் கூட்டத்திலே கலந்துரையாடியுள்ளோம். கூட்டாகச் சேர்ந்து செயற்படுவதே எமக்கு நன்மைபயக்கும்.

மக்களினுடைய எதிர்பார்ப்பாகவும் அது காணப்படுகின்றது. இப்பொழுது இருக்கின்ற தேர்தல் முறைமையில் இது பாதிப்பாகுமா அல்லது நன்மைபயக்குமா என ஆராய வேண்டி இருக்கின்றது.

தற்பொழுது நாங்கள் கட்சியின் தலைவர்களாக சேர்ந்து கூட்டங்களிலே கலந்துரையாடுகின்றோம். ஆனால், தேர்தலில் இறங்குகின்ற பொழுது நாங்கள் சேர்ந்து செயற்படுவோமா? அல்லது பிரிந்து செயற்படுவோமா? என்பது தொடர்பாகக்கூற முடியாது.

எங்களுடைய ஒற்றுமை சிதைக்கப்படக் கூடாது என்ற ஒரு கருத்தியல் இந்தக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், தேர்தல் வருகின்ற போது என்ன நடக்கும் என்று எனக்குச் சொல்ல முடியாது.

இந்த அரசு தேர்தலை பிற்போடக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்பதுதான் என்னுடைய கருத்து.

தற்போது தேர்தல் நடந்தால் அது அரசுக்கு பாதகமாக முடியக்கூடிய சூழலே காணப்படுகின்றது.

எங்களிடம் இருந்து தரவுகளைப் பெற்று விட்டு யார் போட்டியிடுகின்றார்கள் என்பது தொடர்பான விவரங்களையும் பெற்று அதற்குப் பின்னரும் நடவடிக்கைகளை எடுத்து தேர்தலை நிறுத்தக்கூடும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More