செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு

புதுடெல்லிக்கு வருமாறு அமைச்சர் டக்ளஸுக்கு அழைப்பு

1 minutes read

புதுடெல்லிக்கு வருமாறு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கரினால் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடைப்பட்டு இருக்கின்ற இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுக்களை மீண்டும் முன்னெடுத்து, இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தினை தீர்ப்பதற்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டபோது, இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடு காரணமாக பாதிக்கப்படும் தங்களுடைய வாழ்வாதாரம் தொடர்பாக போதிய கரிசனை வெளிப்படுத்தப்படுவதில்லை என்ற ஆதங்கத்தினை வெளிப்படுத்திய கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்த போது கூட தமிழ் மக்களின்  பிரதிநிதிகளினால் கடற்றொழிலாளர் விவகாரம் பேசப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தனக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் கடற்றொழிலாளர் விவகாரம் விரிவாக பேசப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில் காணப்படும் போதைப் பொருள் பரவல் மற்றும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தல், வீதி விபத்துக்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அதேபோன்று, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண திணைக்களங்களினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களை ஆராய்ந்து சரியானவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன், கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

குறிப்பாக, சட்டத்துக்கு முரணான வகையில் சுண்ணக்கல் அகழப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனால் முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுக்களில் உண்மை இல்லை என்பதை கள விஜயங்கள் மூலம் உறுதிப்படுத்துவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுண்ணக்கல் அகழ்வு என்பது ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக இருக்கின்ற நிலையில், உரிய நியமங்களின் அடிப்படையில் சுண்ணக்கல் அகழ்வினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, அகழப்படுகின்ற சுண்ணக்கல், வர்த்தக நோக்கோடு வெளி மாவட்டங்களுக்கு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுகின்ற பட்சத்தில் அவற்றுக்கான அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பதற்கான பொறிமுறையை, சட்ட ஏற்பாடுகளை விரிவாக ஆராய்ந்து, அதற்கேற்ப உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களங்களின் பிரதானிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More