டெல்லி : பாராலிம்பிக் விளையாட்டு குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று தமது இல்லத்தில் விருந்து அளித்தார். பாரா தடகள வீரர்களும் அவர்களது பயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.ஒட்டுமொத்த குழுவினருடன் பிரதமர் இயல்பாகக் கலந்துரையாடினார்.
போட்டிகளில் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையைப் படைத்த அவர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். அவர்களது இந்த சாதனை, விளையாட்டு சமூகம் மொத்தத்திற்கும் ஊக்கமளிக்கும் என்றும், விளையாட்டுகளில் முன்னேற இளம் வீரர்களுக்கு எழுச்சியூட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர்களது செயல் திறனால் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு பெருமளவு அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, குழுவினரின் அசைக்கமுடியாத மனநிலை மற்றும் உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், பாரா தடகள வீரர்கள் தங்களது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு கடினமான தடைகளைக் கருத்தில் கொண்டு இந்த செயல்திறன் போற்றத்தக்கது என்று கூறினார்.
போட்டிகளில் வெற்றி பெறாத வீரர்களின் மனநிலையை ஊக்குவிக்கும் வகையில், உண்மையான விளையாட்டு வீரர், வெற்றி, தோல்விகளால் துவளாமல் முன்னேறிச் செல்வார் என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த பாரா வீரர்கள் தான் நாட்டின் தூதர்கள், தங்களது குறிப்பிடத்தக்க செயல்திறனால் உலக அரங்கில் தேசத்தின் புகழை வீரர்கள் உயர்த்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.