125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியுள்ளது. நேற்று மாலை 5.00 மணி அளவில் மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.முரளி மற்றும் பேராசிரியர் ந.ரத்தினக்குமார் ஒருங்கிணைப்பாளர்களால் பட்டயச்சான்றிதழும் விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.
சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர்.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது என்ற விருது பட்டயம் வாசித்து மேடையில் இயக்குனருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி கூறும்போது,
“வாழும் காலத்தில் பட்டப்பெயர்களை அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்கு பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விததில் மக்கள் தரும் பட்டப்பெயர்களே நிரந்தரமானவை. ஆயினும் மதுரையில் மதிப்புமிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக்குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக்கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இச்சந்தர்பத்தில் பொறுப்புணர்சியும் கூடுகிறது” என்றார்.
இவ்விழாவில் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.