இலங்கையின் எல்லைக்கு அப்பால் உள்ள புலிகள் இலங்கையில் ஈழ ராஜ்ஜியத்தை அமைப்பதற்கு கனவு கண்டுவருகின்றனர். அதற்காக சர்வதேச சமூகத்தை இலங்கைக்கு பயன்படுத்த முயற்சித்துவருகி்றனர் என்று சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆனால் நிலைமையை புரிந்துகொண்டுள்ள அரசாங்கம் அதற்கேற்றவகையில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு எமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்துவருகின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய நாடுகள் சபையிலும் மனித உரிமைப் பேரவையிலும் பிரபல நாடுகள் கொண்டு வந்த பிரேரணைகள் தோல்வியடைந்த சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.