நடிகை அமலாபாலுக்கும் டைரக்டர் விஜய்க்கும் சென்னையில் இன்று திருமணம் நடந்தது. மணமக்களை நடிகர்-நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.
இன்று சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. அமலாபால் பட்டு சேலை உடுத்தி இருந்தார். விஜய் வெள்ளைநிற பட்டு வேட்டி-சட்டை அணிந்து இருந்தார். அமலாபாலுக்கு 10.25 மணிக்கு விஜய் தாலி கட்டினார். வைதீக முறைப்படி திருமணம் நடந்தது. அப்போது திருமணத்துக்கு வந்து இருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினார்கள்.
நடிகர் ஆர்யா, நடிகை சரண்யா பொன்வண்ணன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், அவரது மனைவி பாடகி சைந்தவி, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகினர் பலர் நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு வந்தவர்களை விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன், அண்ணன் நடிகர் உதயா ஆகியோர் வரவேற்றனர்
.