முல்லைத்தீவு பழையச்செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார் .
கொழும்பு மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்கு மிக நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு சொந்தமான பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் குருகந்த ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்து பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்களுடன் பிரச்சனைகளில் ஈடுபட்டுவந்தார் .
இதன்காரணமாக முல்லைத்தீவு பொலிஸாரால் பௌத்த பிக்கு மற்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தரப்பினருக்கு எதிராக சமாதான சீர்குலைவு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் கடந்த மே மாதம் 6ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதாவது பிள்ளையார் ஆலய தரப்புக்கு பிக்குவால் இடையூறு ஏற்படுத்தக்கூடாது இரு தரப்பும் சமாதானமுறையில் தமது வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் . புதியகட்டுமானங்களை மேற்கொள்ளும் போது உள்ளூர் திணைக்களங்கள் பெறப்படவேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது . இந்த தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் பௌத்த பிக்குசார்ப்பில் மேன்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் பௌத்த பிக்கு இன்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.