கொரோனாவால் பெரும் இழப்புக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துள்ள நிலையில்கூட போர்க்காலத்தில் உதவியதைப் போலவே இன்றும் தமது உதிரத்தை உதவியாக வழங்கும் புலம்பெயர் உறவுகளின் உணர்வு மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண்மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
கனடா ஐக்கிய தமிழர் தோழமை முன்னணியினர், தமிழகத்தில் கொரோனா பேரிடரில் சிக்கியுள்ள ஈழ உறவுகளுக்கு செய்த நிவாரண உதவியானது இன்றைய காலத்தில் பேருதவி என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சென்னையிலுள்ள புளிச்சலூர், அண்ணாநகர், வளசரவாக்கம் முதலிய பகுதிகளில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு கொரோனா இடர்கால நிவாரண உதவிகளை வழங்கி வைத்த நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே சண்மாஸ்டர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழகத்தில் உள்ள அகதிமுகாங்களுக்கு வெளியில் பல்வேறு மாவட்டங்களிலும் சுமார் 40 ஆயிரம் குடுங்கள் சிதறி வாழ்கின்றனர். இவர்கள் அகதி என்ற அடையாளம் இல்லாத நிலையில் அகதிகளாக இருப்பது இன்னும் துயரமானது.
அதேநேரம், இவர்களில் பலரும் நாடு திரும்ப முடியாத அரசியல் சூழலைக் கொண்ட குடும்பங்கள். அத்துடன் நாட்டில் வாழ முடியாத நிலையில் இவர்கள் அங்கிருந்து தாய் தமிழகத்தை நம்பி வந்திருக்கிறார்கள். சென்னையில் வளசரவாக்கத்திற்கு வெளியில் இதுபோன்ற இடங்களிலும் ஈழ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
அத்தகைய மக்களின் மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளில் 30 குடும்பங்கள் விகிதம் தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு 888ரூபா பெறுமதியான நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையில் காலச் சுழல் அறிந்த இந்த உதவி அந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமையும்.
இவர்களில் பலர் 18 ஆண்டுகளாக இங்கே அகதிகளாக இருக்கிறார்கள். எத்தகைய சூழல் வந்தாலும் இன அழிப்புக்கான நீதியை பெறுவதில் நாம் ஒன்றாய் இருக்க வேண்டும் என்றும் தாய் மண்ணை விட்டு பிரிந்தாலும் எங்கள் வாழ்வு வலிகள் வேறாக இருந்தாலும் இன வலி என்பது நீதியைப் பெறுவதுதான் என்பதை அந்த மக்களிடம் வலியுறுத்தினேன்.
தாயகத்துடன் ஒப்பிடுகின்ற போது, புலம்பெயர் தேசத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகம். அங்கே உயிரிழப்பும் உறவிழப்பும் எம் மக்களை பேரவலத்தில் தள்ளியுள்ளது. எனினும் இந்த இக்கட்டான நிலையிலும் தாயகத்திலும் தமிழகத்திலும் உள்ள உறவுகளுக்கு தமது உதவிகளை வழங்கி வரும் அவர்களின் இன மற்றும் நில பற்று உண்மையில் மிக நெகிழச்சியை தருகிறது.
அத்துடன் புலம்பெயர் தேசங்களில் கொரோவால் பேரிடரை சந்தித்த நிலையிலும் தமக்கு இத்தகைய உதவிகளை செய்த புலம்பெயர் உறவுகளின் நேசக்கரங்கள் தம் இதயத்தை பற்றுவதாக அந்த மக்கள் பெரும் ஆறுதலையும் உவகையையும் வெளிப்படுத்தினார்கள்.” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.