நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தால் டெல்லி முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுவதுடன், போக்குவரத்து முடக்கத்தால் டெல்லிவாசிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இன்று நடைபெறும் 6ஆம் கட்டப்பேச்சுவார்த்தையில், 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதற்கான வழிமுறைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உறுதி போன்றவை நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்து உள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சாடி உள்ளார். இது குறித்து அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் ‘நாட்டில் வேலையின்மையால் இளைஞர்களும், பணவீக்கத்தின் துயரத்தால் பொதுமக்களும், புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதான் மோடி அரசாங்கம்’ எனப்பதிவிட்டுள்ளார்.