இங்கிலாந்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 10 வயதுச் சிறுமி சாராவின் வழக்கில், சாராவின் தந்தை உட்பட மூவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாக்கிஸ்தானில் இருந்து இங்கிலாந்து திரும்பிய நிலையில், லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி சிறுமி சாராவின் சடலம் மீட்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, சாராவின் தந்தை, சித்தி உட்பட மூவர் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு தப்பிச்சென்றிருந்தனர்.
சிறுமியின் உடற்கூறு ஆய்வில், பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக சிறுமி துஸ்பிரயோகத்திற்கு அல்லது தாக்குதலுக்கு இலக்கானதாக கண்டறியப்பட்டது.
இதனிடையே, பாகிஸ்தானிலும், பொலிஸார் தீவிர நடவடிக்கை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு சுமார் 7.30 மணிக்கு குறித்த மூவரும் கேட்விக் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
41 வயது மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும், 29 வயதுடைய பெண் ஒருவரும் சிறுமி சாராவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் தற்போது பொலிஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.