Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு

2 minutes read

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா கலைஞர்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவும் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 4000 ஆண்டுகளாக விளையாடி வரும் தமிழர்களின் வீர விளையாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயம்? இது மிருக வதையல்ல, மனித வதையென்று கொஞ்சம் மாற்றிச் சொல்லுங்கள். ஜல்லிக்கட்டில் மாடுகள் இறந்ததாக சாட்சிகள் இல்லை. மாறாக மனிதர்கள் மரித்துப் போனதாய்தான் செய்தி இருக்கிறது. இது இப்படியிருக்க, இதை மிருக வதை என்று சொல்லி தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை.

ஜல்லிக்கட்டு மிருக வதையென்றால் அனுதினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு அடிமாடுகளாய் போகும் அவலத்தை உங்களால் தடுக்க முடியுமா?

கோயில்களில் காட்சிப் பொருளாய், கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் யானைகளை உங்களால் அவிழ்த்துவிட முடியுமா?

பறவைகளையும் விலங்குகளையும் சிறைப்பிடித்து அதை ஜோக்கர்களாக ஜோடித்து ரசிக்கும் மிருகக்காட்சி சாலைகளின் கதவை மூடுங்கள். அடைத்து வைத்திருக்கும் அனைத்து உயிரினங்களையும், மிருகங்களையும், பறவைகளையும் சுதந்திரமாக வெளியே விட முடியுமா?

குதிரைப் படை, யானைப் படை என்று மத்திய மாநில அரசு விழாக்களில் அணிவகுத்து நிற்கும் விலங்குகளுக்கு விடுதலை கிடைக்குமா?

தேர்தல் நேரங்களில் கழுதைகளும், ஒட்டகங்களும் மலைக் கிராமங்களுக்கு ஓட்டுப்பெட்டி சுமக்கும் விலங்குகளுக்கு கருணை கிடைக்குமா?

காவல் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாயக்ளை விடுவிக்க முடியுமா?

ஏன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் விலங்குகளுக்கு, மாற்று உணவு ஏற்பாடு செய்ய முடியுமா? இந்திய முழுவதும் சைவ உணவுதான் – அசைவத்திற்கு தடை விதியுங்கள்.

இதெல்லாம் உங்களால் முடியும் என்றால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதியுங்கள். இது ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்குமான உணர்வுப்பூர்வமான விளையாட்டு. இதில் திமிலா, தேளா? என்ற போட்டியே தவிர, மிருக வதைக்கான இடமே இல்லை. மனிதன், மடிந்திருக்கிறானே தவிர மாடுகள் இறந்ததாக தகவல் இல்லை. மனித வதையென்று மனு செய்திருந்தால்கூட ஏற்றுக் கொள்ளலாம். மிருக வதை என்பது இரண்டாம் கருத்து.

ஜல்லிக்கட்டுக்கு தடையென்ற பெயரில் நாட்டு மாடுகள் அழிக்கப்படுகின்றன. சினை போட காளைகள் இல்லாமல், நம் பசு மாடுகளுக்கு சினை ஊசி போட்டே கருத்தரிக்கச் செய்கிறோம். இதிலிருந்து வரும் பால், விஷத்தன்மை கொண்டதாக சொல்கிறார்கள். அந்நிய முதலீடும் இதில் தலை காட்டுகிறது.

நம் கண்முன்னே பண்பாட்டு, பாரம்பரியம் பலியாக வேண்டுமா? திருவிழாக் காலங்களில் மனிதர்கள் மட்டுமே சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருக்க வேண்டாமென்று மாடுகளையும் பட்டியலில் சேர்த்துக் கொண்டாடும் தமிழனின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிக்கு போட்ட கடிவாளத்தை கழட்டி விடுங்கள். எங்கள் காளைகளுக்கு கட்டிய மூக்கனாங்கயிற்றை அவிழ்த்து விடுங்கள்.

எங்கள் வாடி வாசலில் காளைகளின் காலடிக் குளம்புக் கோலங்கள் பதியட்டும். தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் அழியாதிருக்கட்டும்.

ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு மனுசனையே கடிக்க வருமாம் ஒன்று. கடைசியில் அங்கே இங்கேன்னு கையை வைத்து தமிழனின் பழக்க வழக்க பண்பாட்டு கலாச்சாரத்தின் அடி மடியிலேயே கையை வைக்கின்ற அவல நிலையை மத்திய அரசு கையாள்வதும், அதறகு மாநில அரசு கைகட்டி நிற்கும் என்று எதிர்பார்ப்பதும் தமிழனை அவமானத்தின் பெருங்குழியில் தள்ளுவதற்கு சமமானதாகும். உங்கள் அறிவிப்புகளாலும், சில சட்டத்திட்ட முறைகேடுகளாலும் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் கை வைக்காதீர்கள்.

அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்பதை தாழ்மையோடு கேட்டுக் கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை. இதனை இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More