யாழ் திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்படுத்தவுள்ள சினம்கொள் திரைப்படத்தை பார்வையிட படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
“ஒவ்வொரு கலைஞனுக்கும் தன் படைப்பு தன் மண்ணிலேயே வெளியிடப்படும்போது வருகின்ற பெரு மகிழ்ச்சி ஒரு மகத்துவமானது. அதுவும் அகதியாக புலபொயர்ந்துவிட்ட ஈழத்தவனான என் மகிழ்ச்சியை வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. சினம்கொள் திரைப்படத்தை எடுக்குபோது சந்த்தித்த சாவல்கள், நெருக்கடிகள் எல்லாம் திரையிட அனுமதி கிடைத்த கணத்தில் காணமலே போய்விட்டன.
இப்படத்தை உருவாக்க ஒத்துழைத்த, தோளோடு தோள் நின்ற அத்தனை உள்ளங்களையும் நன்றியோடு நினைத்துப்பார்க்கின்றேன். என் எல்லாவிதமான பேச்சுக்களையும் சகித்துக்கொண்டு சினம்கொள்ளுக்காக உழைத்த என் உதவியாளர்களின் கடின உழைப்பை நன்றிப் பெருக்கோடு நினைத்துக்கொள்கின்றேன்.
ஈழசினிமா அது ஒரு பெரும்கனவு, எம்மண்னின் அடையாளத்தோடு சர்வதேசத்தை நேக்கி பயணிக்க போகும் பெரும் நிகரற்ற இலட்சியம். அந்த கனவுக்காய் புலத்திலும், நிலத்திலும் என் சக கலைஞர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த போரின் வலிகளுக்கு மருந்து என்பது அங்கீகாரம். எம்மக்களால் எமக்கு கிடைக்கும் அங்கீகாரம். அதை அம்மக்கள் எமக்கு தருவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
அரச இயந்திரத்தை தாண்டி எம் அரசியலையும் வாழ்வியலையும் சொல்வது என்பது எம்மண்ணில் சாத்தியமற்றது. அதை தாண்டி ஒரு திரைப்படத்தை சாதனையாக்க முயன்றிருக்கின்றோம். எம் திரைப்படத்தோடு வெளிவர இருக்கும் அனைத்து ஈழத்திரைப்படங்களுக்கும் வாழ்த்துகள். எம் தேச விடுதலைக்காய் விதையான அனைத்து ஆத்மாக்களும் கடவுளாக துணை நின்று எம்மை பலப்ப்டுத்துவார்கள் என்பது தானே எம் பெரும் நம்பிக்கை..“ என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இப் படத்தில் வசன கர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ள தீபச்செல்வன் விடுத்துள்ள அழைப்பு இதோ…
“சினம்கொள் படத்தை எப்போது பார்க்கலாம் என்று விசாரித்த நண்பர்களுக்கு படத்தை பார்க்க அரிய வாய்ப்பொன்று. எத்தனையோ நெருக்கடிகள் போராட்டங்களை கடந்து உருவான திரைப்படம் ‘சினம்கொள்’.
ஈழ மண்ணின் இன்றைய வாழ்வையும் போராட்டத்தையும் மிகுந்த கலாபூர்வமாகவும் உயர்ந்த தொழிநுட்பத்தோடும் பேசுகின்ற இத் திரைப்படம் ஈழச் சினிமாவில் ஒரு மைக்கல்.
இத் திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றியமை மிகச் சிறந்த பேறு என கருதுகிறேன். எதிர்வரும் 21 ஆம் திகதி யாழ் திரைப்பட விழாவின் முதலாவது திரையிடலாக, காகிலஸ் – ரீகல் சினிமாவில் 2.30 மணிக் காட்சி. வருக நண்பர்களே!..“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.